18+ வயதினருக்கான முக்கிய அறிவிப்பு… மிஸ் பன்னிடாதீங்க.. ரொம்பவே வருத்தப்படுவீங்க…!

By manimegalai aFirst Published Nov 13, 2021, 9:18 AM IST
Highlights

சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் பலரும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறாது.

சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் பலரும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறாது.

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கடந்த ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள். 7,342 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்காளர் பட்டியலில், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரி செய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது. எனவே, பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா? என்பதை வாக்காளர்கள் முதலில் சரிபார்க்க வேண்டும். அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும்போது அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், இதுவரை பெயரை சேர்க்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே அதற்கு வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்  மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் இதுவரை பட்டியலில் பெயர் பதிவுசெய்யாத அனைவரும் 6-ம் எண் விண்ணப்பத்தை அளித்து பெயர் பதிவுசெய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி அளிக்கும் பகுதியை கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புகைப்படம் தெளிவாக இருப்பதற்காக 200 டிபிஐ ரெசல்யூசன் கொண்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

சமீபத்திய வாடகை உடன்படிக்கை, இந்திய தபால் துறையால் சமீபத்தில் பெறப்பட்ட முகவரியுடன் கூடிய கடிதம், சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், காஸ் இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை, முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல், வயது குறிப்பிடப்பட்ட ஐந்து, எட்டு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இந்திய பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

ஏற்கனவே பெயர் பதிவுசெய்து, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம்மாறிய வாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம் எண் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் 8ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டியலில் திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ள 8-ம் எண் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ புதிய அட்டைக்காக தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 001 விண்ணப்பத்தை அளிக்கவேண்டும். வாக்காளர் சிறப்பு முகாம்களில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள், www.nvsp.in; https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், 'VOTER HELP LINE' மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் கன மழை காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து துறையினரும், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வாக்காளர் சிறப்பு முகாமை, வேறு தேதிக்கு மாற்றும்படி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதினார். அதையேற்ற தேர்தல் ஆணையம், சென்னையில் ௧௬ சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுவதை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

click me!