சென்னையில் ஓடும் பேருந்தின் கூரை மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இரு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புள்ளிங்கோ என்கிற வார்த்தை தமிழகத்தில் தற்போது பெயர் பெற்றது. அரைகுறை ஆடையுடன், வித்தியாசமான தலை அமைப்புகளுடன், முடியில் கலர் டை அடித்து பார்ப்பவர்களை மிரளச் செய்யும் வகையில் பைக்கில் பறந்து செல்வார்கள், இந்த 'புள்ளிங்கோ' கெட் அப்பில் இருக்கும் இளைஞர்கள். சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். இந்த இளைஞர்கள் அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.
இதனால் காவல்துறை சார்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பைக் ரேஸ் தடை செய்யப்பட்டது. வாகனங்களில் அதிவேகமாக செல்வது மட்டுமின்றி, அரசு பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களிலும் இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும்போது பேருந்துகளின் படிக்கட்டில் தொங்குவது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிடுவது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளை அவர்களே காணொளி எடுத்து பரவவிட்டு காவல்துறையில் சிக்கிக்கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது ஓடும் பேருந்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பிராட்வே செல்லும் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது கூரை மீது ஏறி கூச்சலிட்டுள்ளனர். பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் கூறியும் அவர்கள் கேட்காமல் சேட்டை செய்துள்ளனர். இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு இரண்டு மாணவர்களையும் பயணிகள் பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.