மக்களே கவலை வேண்டாம்... நாளை முதல் வீடுதோறும் விநியோகம்... சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2021, 2:20 PM IST
Highlights

நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பயன்படுத்தி காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனிடையே நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலமாக பழங்கள், மற்றும் காய்கறிகளை விநியோகம் செய்வது குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், 

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி. காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை தினம் தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.

சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத் தொடரை மேலும் விரிவுப்படுத்திட நின்சாகார்ட், வே கூல், பழமுதிர் நிலையம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம், அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்போழுது சுமார் 3000 மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!