இன்னைக்கு சொந்த ஊருக்கு போகப்போறீங்களா?... சிறப்பு பேருந்துகள் பற்றிய முழு விபரம் இதோ...!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2021, 12:18 PM IST
Highlights

மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்றும், இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவு 11.45 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகளை கூட திறக்க அனுமதி கிடையாது. நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்றும், இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவு 11.45 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

நேற்று இரவு பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை செயலாளர் சமயமூர்த்தியும் ஆய்வு செய்தனர்.  அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை செயலர் கூறியதாவது:  சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து 4500 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்துறை அமைச்சரின் மேற்பார்வையில் மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், கூடுதலாக  400 பேருந்துகள் தயாராக உள்ளன. இதற்கு மேலும் கூடுதலாக பயணிகள் வருகை தந்தால் அவர்கள் பயணிக்க ஏதுவாக மாநகர பேருந்துகளை பயன்படுத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம்.  கோயம்பேட்டில் மட்டும் நேற்று முதல் 1500க்கும் அதிகமான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்கு மட்டும் SETC மூலம் 380 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. 

பேருந்து போக்குவரத்தில் பயணிகள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தொடர்ந்து பயணிக்கலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். கூட்டத்தினைப் பொறுத்து பயணிகளின்  வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.  பேருந்து நிலையத்தில் தொடர்ந்து இயக்கப்படும் பேருந்துகளை கண்காணிக்க 24 மணி நேரமும் எங்களது அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளார்கள் என தெரிவித்தார். 

click me!