
ADMK Decides to Give Rajya Sabha Seat to DMDK: தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது. திமுகவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு கொடுக்கப்படுகிறது.
அதிமுக மாநிலங்களவை சீட் யாருக்கு?
ஆனால் அதிமுக தரப்பில் ஒரு மாநிலங்களவை சீட்டை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் நிலவி வந்தது. கட்சியினர் பலர் மாநிலங்களவை சீட்டை கேட்டு வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிகவும் மாநிலங்களவை சீட்டை கேட்டு வருகிறது. ஏற்கெனவே தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி வைத்த நிலையில், மாநிலங்களவை சீட் தருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
ஆனால் ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை'' என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ''ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுவின் கடமை. அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் திமுக கமல்ஹாசனுக்கு சீட் கொடுத்துள்ளது.அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள்'' என்று கூறியிருந்தார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு?
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார். தேமுதிகவுக்கு ஏற்கெனவே கூறியபடி ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தர வேண்டும் என சுதீஷ் அவரிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது உங்களுக்கு சீட் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி சுதீஷிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
எல்.கே.சுதீஷ் விளக்கம்
தேமுதிகவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் வழங்கினால் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக உறுதி அளித்ததால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று எல்.கே.சுதீஷ் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.