அந்த வரிசையில் தற்போது தனியார் நிறுவன காவலாளி தங்கதுரை செய்த காரியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஒவ்வொரு நன்கொடைகளும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், இதுகுறித்த கணக்குகள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர்.
இன்று காலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா தன்னுடைய கணவர் விசாகனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் கேட்ட மறுகணமே பல்வேறு தரப்பிலும் உதவிகள் குவிய ஆரம்பித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது தனியார் நிறுவன காவலாளி தங்கதுரை செய்த காரியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, தனியார் நிறுவன காவலாளியான தங்கதுரை என்பவர் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை (10 ஆயிரத்து 101 ரூபாயை) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இதற்காக தான் பணிபுரியும் இடத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு சைக்கிளிலேயே வந்த தங்கதுரை தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையும் முழுதாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கதுரையை அழைத்து பாராட்டியதோடு கலைஞர் கருணாநிதி எழுதிய திருக்குறள் விளக்க புத்தகத்தில், தன்னுடைய கையொப்பமிட்டு பரிசளித்துள்ளார்.