முடிவெட்ட சலூன் போறீங்களா? அப்போ கண்டிப்பா ஆதார் கட்டாயம்... அறிவிப்பின் முழு விவரம் இதோ..!

By vinoth kumarFirst Published Jun 2, 2020, 5:53 PM IST
Highlights

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில்  சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிக்கவேண்டும். வாடிக்கையாளர், பணியாளர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முடிவெட்ட சலூன் போறீங்களா? அப்போ கண்டிப்பா ஆதார் கட்டாயம்... அறிவிப்பின் முழு விவரம் இதோ..!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில்  சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிக்கவேண்டும். வாடிக்கையாளர், பணியாளர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி தமிழகம் முழுவதும் சலூன், பியூட்டி பார்லர், ஸ்பா உள்ளிட்ட நிலையங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதியில் உள்ள முடி திருத்தும் நிலையம், சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிபந்தனைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சலூன் கடைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

முழு விவரம்;-

* சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும்.

* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.

* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.

* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.

* அதேபோல் வாடிக்கையாளர்களும் அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

*அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!