தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 23,495ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வரவில்லை. சீரான வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரம் என்கிற அளவில் தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பரிசோதனை மையங்களை அதிகரித்த தமிழக அரசு, பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை.
பரிசோதனைகள் அதிகரிக்கப்படாத நிலையில், பாதிப்பு மட்டும் அதிகரிப்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நேற்றைவிட இன்றைக்கு குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ளன. இன்று 11,377 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 1162 பேருக்கு தொற்று உறுதியானது. இதுதான் தமிழ்நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 23,495ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770ஆக அதிகரித்துள்ளது.
இன்று 413 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 13170ஆக அதிகரித்துள்ளது. 10318 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்று 11 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.78%ஆக உள்ளது.