மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 8 வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி முகமது பரூக், ராஜகோபாலனை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.
பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியதால் ராஜகோபாலனை ஜூன் 4ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ராஜகோபாலனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனுவை ஏற்ற நீதிமன்றம் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது.
போலீசார் ராஜகோபாலனிடம் பல்வேறு கேள்விகளை தயார் செய்து விசாரணை நடத்தினர். அதன் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் சார்பில் தாக்கல் செய்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்ப இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை தற்போது தான் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், 3 நாட்கள் விசாரணையில் அவருக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறி ஜாமீன் தர மறுப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி முகமது பாரூக் கூறி ராஜகோபாலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.