நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலையில் இருந்து தமிழகத்தை காப்பதற்காக தமிழகத்தில் மே 24ம் தேதி முதல் தளர்வுகற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு 7-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்துடனும் மே 14ம் தேதி காலை 6 மணி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இங்கு அத்தியாவசியத் தேவைகளுக்கான தளர்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காய்கறி, பழம், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறையைப் போலவே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாதளங்களான இவற்றுக்கு இ-பதிவு பெற்று பயணிக்கலாம் என்ற அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் குவியக்கூடாது என்பதற்காகவே அவசர காரணங்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு கன்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.