தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தமா? ஓபிஎஸ் நள்ளிரவு வரை ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Mar 9, 2024, 9:05 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி மட்டும் எப்போதும் போல தனித்து நின்று மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி மற்றும் டிடிவி. தினகரனின் அமமுக  பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு முறை வந்த போதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டிடிவி. தினகரன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனிடையே பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

இந்நிலையில் வரும் திங்களன்று தேனியில் இருந்து சென்னை வரவிருந்த ஓபிஎஸ் அவசர அவசரமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வருவதற்கு முன்னரே அவரது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் கு.ப.கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் உள்ளிட்டோர் அவரது இல்லத்தில் காத்திருந்தனர்.

நேற்று இரவு 10:15 மணியளவில் தொடங்கிய ஆலோசனை நள்ளிரவை கடந்த பிறகும் நடந்தது. பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், பாஜக தரப்பில் ஓபிஎஸ்-ஐ அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓபிஎஸ்-ஐ தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!