பச்சையப்பன் கல்லூரி வழக்கு.. தனி நீதிபதி உத்தரவு நிறுத்திவைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Nov 22, 2022, 2:47 PM IST
Highlights

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான  கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

பச்சையப்பன் அறக்கட்டளை  கல்லூரியின் 254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான  கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் கூறினர்.  

தாங்கள் போதிய தகுதியை பெறவில்லை எனக்கூறுவது தவறு எனக்கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், பல்கலைக் கழகமும், அரசும் தங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினர். பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறக்கட்டளையை நிர்வகித்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, 152 பேராசிரியர்கள் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை கூறி, அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்ததாகக் கூறினார். 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில், 152 உதவி பேராசிரியர்களுக்கு ஆசிரியர் பணி அனுபவத்துக்கான கூடுதல் மதிப்பெண் வழங்கியதில்  மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளதாகவும், ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி ஆகாத நிலையில் 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின்  உத்தரவு நிலைக்கத்தக்கல்ல எனக்கூறி, மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

click me!