திமுகவை களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாஜக.! அதற்கு அதிமுக துதி பாடுகிறது.. ரகுபதி விளாசல்

By Ajmal KhanFirst Published Mar 10, 2024, 1:59 PM IST
Highlights

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என வரிசையாக களமிறக்கிவிட்ட பாஜக அரசு இன்றைக்கு தமிழ்நாட்டிலே திமுக அரசை களங்கப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவை  களத்தில் இறக்கி விட்டிருக்கிறது என ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். 
 

 திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்த முயற்சி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாக ஜாபர் சாதிக் திமுகவிற்கு நிதி அளித்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, திமுகவை  களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது அகில இந்திய அளவிலும் எடுபடாது.

பாஜகவினுடைய சர்வாதிகாரப் பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும் நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவிலே அணி திரட்டுவதில் திமுக முக்கிய பங்கு வகித்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.  திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று பாஜக தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு துணையாக அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கிறது என விமர்சித்தார். 

ஈடி, சிபிஐ, ஐடி.. இப்போ போதைப்பொருள் தடுப்பு துறை

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை வைத்து மத்திய அரசினுடைய விசாரணை அமைப்புகளை வரிசையாக களமிறக்கிவிட்ட பாஜக அரசு இன்றைக்கு தமிழ்நாட்டிலே திமுக அரசை களங்கப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இப்பொழுது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவை  களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

திமுகவை என்.சி.பி வைத்துக்கொண்டு மிரட்டி பார்க்கலாம் என்ற எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக விசாரணை அமைப்பின் துணை இயக்குனர் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார்.  திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை வைத்துக்கொண்டு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடைய முடியுமா என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் இதை மறந்து விட மாட்டார்கள். 

விஜயபாஸ்கர் வீட்டில் குட்கா ஆதாரம்

தமிழ்நாட்டு அரசியலில் குட்காவை அமைச்சர்களை வைத்து குட்கா வியாபாரிகளுக்கு துணையாக இருந்தது அதிமுக ஆட்சியில் என்பது நாடறிந்த உண்மை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஒரு பேப்பர் எடுக்கப்படுகிறது அதில் 85 கோடி ரூபாய் எந்த அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளது. என்ற விவரங்கள் இருக்கிறது அதிலும் வருமானவரித்துறை அமலாக்கத்துறை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஜாபர் சாதிக் மீது பிப்ரவரி 15ஆம் தேதி அன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்கள், ஆனால் பிப்ரவரி 21 அவர் மங்கை திரைப்பட வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அப்பொழுது என்.சி.பி எங்கே போனது.? என கேள்வி எழுப்பினார். ஜாபர் சாதிக்கை அன்றைக்கு காப்பாற்றியது இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிற  அப்போதைய அதிமுக ஆட்சி தான்.

சிவில், கிரிமினல் வழக்கு- திமுக எச்சரிக்கை

கட்சியில் சேர்பவர்கள் அனைவரையும் சோதித்து பார்க்க முடியாது.  ஆனால் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  ஜாபர் சாதிக்கும் அதே போல் தான் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளோம். எங்களைப் பொறுத்த வரைக்கும் சட்டபூர்வமான நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்படும்.  நிச்சயமாக குற்றவாளிகளுக்கு துணையாக போக மாட்டோம், காப்பாற்றவும் மாட்டோம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருவோம் என உறுதியாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய  தி.மு.க வழக்கறிஞர் பி.வில்சன் கூறும்போது,  இந்த வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் தி.மு.கவினர் மீது குற்றம்சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம். மத்திய அரசு ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுத்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வில்சன் கூறினார்

இதையும் படியுங்கள்

போதைப்பொருள் விற்பனை செய்து கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட திமுக முயற்சி.. எடப்பாடி பழனிசாமி பகீர்..!

click me!