மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தான் பொருத்தமாக இருக்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் போயஸ் தோட்டத்தில் உள்ளது . அவரது மறைவுக்கு பின் அதனை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது . வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு 2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது.
அதன்பிறகு டாக்டர் ஏனோக் தலைமையில் குழு அமைக்கப்பட்டு போயஸ் தோட்ட பகுதியில் வசிப்பவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன . அதையெல்லாம் பரிசீலித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார் .
அதன்படி வேதாநிலையத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் ,டி.எம்.எஸ். மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில் உள்ள காலி இடங்களை வாகனங்கள் நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார் .கவர்னர் மாளிகை போல போயஸ் கார்டனிலும் ஆன்லைன் மூலம் பார்வையாளர்களை பதிவு செய்து அனுமதிதித்தால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும் எனவும் கூறியுள்ளார் .
ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஜெயலலிதா திகழ்வதால், அவர் வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது தான் முற்றிலும் பொருத்தமான நடவடிக்கை என தனது அறிக்கையில் சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார் .