கொரோனாவால் அலறும் சென்னை..! ராயபுரத்தில் ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..!

By Manikandan S R SFirst Published May 16, 2020, 12:50 PM IST
Highlights

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,435 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 2,599 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 71 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 919 பேருக்கும், திரு.வி.க.நகரில் 737 பேருக்கும், தேனாம்பேட்டையில் 640 பேருக்கும், அண்ணா நகரில் 493 பேருக்கும், வளசரவாக்கத்தில் 483 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போல தண்டையார்பேட்டையில் 474 பேர், அடையாறில் 316 பேர், அம்பத்தூரில் 285 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூரில் 133 பேருக்கும், மாதவரத்தில் 92 பேருக்கும்,  மணலியில் 79 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் பெருங்குடியில் 77 பேர், சோழிங்கநல்லூரில் 74 பேர், ஆலந்தூரில் 71 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது. நகரில் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!