தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
தமிழ்நாட்டில் மே 13ம் தேதி வரை தொடர்ச்சியாக 10 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் அதிகமாக இருந்தது. உச்சபட்சமாக 798ஐ தொட்டிருந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. நேற்று 447 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களின் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 100க்கும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 500க்கு கீழாகவே உள்ளது. இன்று 10,883 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 434 பேருக்கு தொற்று உறுதியானது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் மொத்தம் 310 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்ட 124 பேரில் 49 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஆவர்.
இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக 359 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 2599ஆக அதிகரித்துள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. 7435 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.