தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதியானது 2016ம் ஆண்டு மார்ச் அன்று அறிவிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயளிகளின் பிரிவுகள் கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்த தான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிக்கு இந்த விதி பொருந்தும்.
விதி 10-ன் கீழ், மருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து, அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தை பெற வேண்டும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை பெஞ்ச், புதுடெல்லி 15.07.2019 தேதியிட்ட உத்தரவில் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை இணங்க தவறியவர்களுக்கு சுற்றச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.