பீதியை கிளப்பும் கொரோனா..! சென்னை முக்கிய விமானங்கள் அதிரடி ரத்து..!

By Manikandan S R SFirst Published Mar 6, 2020, 1:15 PM IST
Highlights

ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் லுப்தான்சா விமானம், பாங்காங்கில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ‘தாய்’ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானம் ஆகிய 3 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3042 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!

கொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்ட நிலையில் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் லுப்தான்சா விமானம், பாங்காங்கில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ‘தாய்’ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானம் ஆகிய 3 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, பயணிகள் வருகை குறைந்ததன் காரணமாக விமான சேவை ரத்தாகி இருக்கலாம் என்றனர்.

இதனிடையே சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

click me!