தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் எங்களை ஏமாற்றியதுபோல், பல வாடிக்கையாளர்களை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம். எனவே சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடையில் தங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை கலந்து விற்பனை செய்வதாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஐயப்பன்தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில்;- நான் கடந்த 2015ம் ஆண்டு, திநகரில் உள்ள சரவணா ஸ்டோர் எலைட் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல், 2016ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கினேன்.
இந்நிலையில் 2016ம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ம் ஆண்டு அறுந்து விழுந்தது. இந்த செயினை எடுத்து பார்த்தபோது அதில் வெள்ளி கம்பிகள் இருந்தது. இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும்போது தெரியாமல் நடந்திருக்கலாம் என்று கூறி அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர், வேறு நகைகளை மாற்றி கொடுத்தார்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனது. அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு ஏமாற்றி இருந்தனர். தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் எங்களை ஏமாற்றியதுபோல், பல வாடிக்கையாளர்களை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம். எனவே சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று மாம்பலம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மாம்பலம் போலீசார் மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடை எழுந்து புகார் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.