தமிழகம் திரும்பிய தங்கமகள் இளவேனில் வாலறிவன்.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என பேட்டி!!

By Asianet TamilFirst Published Sep 3, 2019, 5:32 PM IST
Highlights

பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் இன்று தமிழகம் வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ISSF எனப்படும் International Shooting Sport Federation (பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பு) நடத்தும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஃப்ரேசில் நாட்டின் ரியோ டி ஜெனேரியோ நகரில் நடந்தது. பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 20 வயதான இளவேனில் வாலறிவனும் கலந்து கொண்டார்.

இதில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்ற இவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவருக்கு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இவர் குஜராத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தமிழகம் வந்தார் இளவேனில் வாலறிவன்.அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் விளையாட்டிற்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக கூறினார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் பேசிய அவர் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன என்றும் அதற்காக முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவரை சந்திக்க உள்ளார்.

click me!