சென்னையில் குறையும் கொரோனா தொற்று... சென்னையை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஆர்வம்..!

By Asianet TamilFirst Published Aug 6, 2020, 9:00 PM IST
Highlights

கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால் சென்னையை விட்டு சென்றவர்கள், தற்போது மீண்டும் சென்னைத் திரும்ப ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் இன்று 5684 பேர் கொரோனாவல் பாதிக்கபப்ட்டனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 1091 ஆக இன்று பதிவானது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 1,06,095ஆக உயர்ந்து உள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மொத்தம் 37,537 தெருக்கள் உள்ளன. இதில் முன்பு 9,509 தெருக்களில் கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே அந்த தெரு தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.


தற்போது சென்னையில் 24 தெருக்கள் மட்டுமே தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. சென்னையில் 1.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11,811 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. இதற்கிடையே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, ஏராளமானோர் சென்னையைவிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்துவருகிறது.


இதனால், சென்னையைவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றோர், மீண்டும் சென்னை திரும்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னை திரும்புவதற்காக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

click me!