
சென்னையில் சாலை விபத்தில் காயம் அடைந்த நபருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயம் மிக்க காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சென்னை அமைந்தகரை மார்க்கெட் புல்லா அவென்யூ பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் பாபு என்ற நபர் சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்தை ஏற்படுத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை விபத்தில் மயங்கிக் கிடந்த பாபுவுக்கு தண்ணீர் கொடுத்து, சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்து முதலுதவி செய்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து காயம் அடைந்த பாபு நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், காயமடைந்தவருக்கு துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோரின் செயலை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.