போலீசாரால் விபத்தில் சிக்கிய இளம்பெண்... மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை..!

By vinoth kumarFirst Published Nov 3, 2019, 11:50 AM IST
Highlights

சென்னையில் போலீசார் லத்தியால் தாக்கியதால் விபத்தில் சிக்கிய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போலீசார் லத்தியால் தாக்கியதால் விபத்தில் சிக்கிய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை செங்குன்றம் அடுத்த நல்லூர், சிவந்தி ஆதித்தன் நகர், ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் யுவனேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி (25). இவர்களுக்கு கடந்த 5 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி மாலை செங்குன்றத்தில் இருந்து மொபட்டில் பிரியதர்ஷினி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது, காந்தி நகர் போலீஸ் பூத் அருகே சாலை வளைவில் திரும்பியபோது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் லத்தியால் பிரியதர்ஷினியின் மொபட்டை அடித்து நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன பிரியதர்ஷினி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பிரியதர்ஷினி இடுப்பு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, விபத்துக்கு காரணமான போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள போலீஸ் பூத் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்து பிரியதர்ஷினி வீடு திரும்பினார். ஆனாலும், அவரது 2 கால்களும் முறிவு ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல், மனவேதனையுடன் காணப்பட்ட பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!