சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
தலைநகர் சென்னை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 4 நாட்களாகவே கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டி வருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்தழைப்பு இல்லாததால் கொரோனா சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்ட 1,286 பேரில் 1,012 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 208 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,689ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 2வது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதியில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல், சென்னையில் இன்று மட்டும் 11 பேர் உயிரிழப்பை அடுத்து மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது.