
கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் மற்றும் விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்திகுமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் அமைத்த குழு சார்பிலும், தமிழக கால்நடைத்துறை சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக கால்நடைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தெரு நாய்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்காக கால்நடைத் துறை சார்பில் 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஊரடங்கால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள வாயில்லா பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அவற்றுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு ஒதுக்கியுள்ள 9 லட்சம் ரூபாய் நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை மே 31 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.