எஞ்சிய 73 கோடி ரூபாய் நிலை என்ன?... தமிழக அரசிடம் விளக்கம் கோரிய உயர் நீதிமன்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 3:02 PM IST
Highlights

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக வழங்க ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கண்பார்வையற்ரவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், கண்பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு, தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கண்பார்வையற்ரவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

 மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், மீத தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 73 கோடி ரூபாய் நிலை என்ன என  கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், 133 கோடி ரூபாய் தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

click me!