விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்... 3 மாதங்களுக்கு திறக்க முடியாது... சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Apr 5, 2020, 10:42 AM IST
Highlights

விதிமுறைகளை மீறியதற்காக சீல் வைக்கப்படும் கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது. இது மளிகை, பல்பொருள் அங்காடிகளுக்கும்  பொருந்தும். சென்னையில் இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்க வேண்டும். 

தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளை மீறியதற்காக சீல் வைக்கப்படும் கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகளைத் திறப்பதற்குத் தமிழக அரசு ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரத்தைக் குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநாகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விதிமுறைகளை மீறியதற்காக சீல் வைக்கப்படும் கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது. இது மளிகை, பல்பொருள் அங்காடிகளுக்கும்  பொருந்தும். சென்னையில் இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்க வேண்டும். இறைச்சி கூடங்களில் வெட்டப்படாத இறைச்சியை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இறைச்சி விற்பனை கடைகளில் சமூக விலகல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!