கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள சென்னையில், கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. தினமும் பாதிப்பு தாறுமாறாக எகிறி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2526 பேரில் 1082 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் 43% சென்னையில்தான்.
மற்ற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் சமூக தொற்று தொடங்கிவிட்டதால் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஊரடங்கு பின்பற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில் சென்னையில் திருவிக நகர் மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது.
கொரோனா கட்டுக்குள் வராததால் மே 3ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு தேசியளவில் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மண்டலம் 5-ல் மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் நாளை முதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.