உங்க ஏரியாவுக்கு எப்போ காய்கறி வண்டிகள் வரும்... ஈசியா தெரிஞ்சிக்க மாநகராட்சியின் பலே திட்டம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 25, 2021, 1:18 PM IST
Highlights

சென்னையில் எந்தெந்த ஏரியாவிற்கு காய்கறி வண்டிகள் வரும் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து தகவல்களும் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்பட உள்ளதாக  மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

சென்னையில் எந்தெந்த ஏரியாவிற்கு காய்கறி வண்டிகள் வரும் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து தகவல்களும் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்பட உள்ளதாக  மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தையும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

சென்னை கே.கே.நகரில் நடமாடும் காய்கறி கடைகளை  மாநகராட்சி ஆணையர் ககன் தீப் பேட்டி தொடங்கிவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடமாடும் காய்கறி கடைகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சி சார்பில் எந்தெந்த பகுதிகளுக்கு நடமாடும் காய்கறி வாகனங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன போன்ற தகவல்களை விரைவில் இணையத்தில் பதிவேற்றப்படும் என்றும், இதன் மூலம் எந்தெந்த தெருக்களுக்கு காய்கறி வண்டிகள் வரும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். 

மேலும் மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

click me!