
ரயிலில் பட்டாக் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற போலீஸ் எச்சரிக்கையும் மீறி கல்லூரி மாணவர்கள் பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பேருந்து, ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளில் ரூட் தல பிரச்னை தொடங்கி தற்போது ரயில்களிலும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், மாணவர்கள் கத்தி, கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இவர்களது அட்டகாசம் குறையவில்லை.
இதையும் படிங்க;- பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.!
சமீபத்தில் கூட ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் கல்லூரி மாணவன் ஒருவர், பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் சென்ற காட்சிகள் வைரலானது. இதனையடுத்து, அரிவாள், கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்றபடி உள்ளனர். அவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களின் நடைமேடையில் மின்சார ரயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர்.
இதனை கண்டு ரயிலில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், புறநகர் ரயிலில் செல்லும் பயணிகள் எப்போதுமே ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் ரகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க;- விஸ்வரூபம் எடுத்த ரூட்டு தல விவகாரம்..மாணவருக்கு அரிவாள் வெட்டு ! பீதியுடன் பொதுமக்கள்