அந்த மனசு தான் சார் கடவுள்… குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கம்.. உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!

By manimegalai aFirst Published Oct 17, 2021, 5:59 PM IST
Highlights

குப்பைகளை தரம்பிரித்துக்கொண்டிருந்த போது அதில் கிடந்த பெரிய தங்க நாணயத்தைக் கண்டு மேரி அதிர்ச்சி அடைந்தார்.

குப்பைகளை தரம்பிரித்துக்கொண்டிருந்த போது அதில் கிடந்த பெரிய தங்க நாணயத்தைக் கண்டு மேரி அதிர்ச்சி அடைந்தார்.

தங்கம் விற்கும் விலைக்கு அதனை முதலீட்டாளர்கள் வங்கி லாக்கரில் வைத்து பூட்டுகின்றனர். செயின் பறிப்பு திருடர்கள் புற்றீசல் போல் முளைத்துக்கொண்டிருக்கும் காலத்தில் தான் இப்படியானவர்களும் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் இருப்பதனால் தானோ சென்னையில் அடிக்கடி மழை பெய்கிறது என்று நினைக்கத் தோன்றும் வகையில் உள்ளது தூய்மைப் பணியாளரின் செயல்பாடு.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மேரி, அதே பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளாராக பணியாற்றி வருகிறார். ஆயுதபூஜை முடிந்ததும் பல வகையிலான குப்பைகள் நகரம் முழுவதும் டன் கணக்கில் குவிந்து கிடந்தது. அந்தவகையில் திருவொற்றியூரில் குவிந்த குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணியாளர் மேரியின் கையில் சுமார் 100 கிராம் எடைகொண்ட தங்க நாணயம் சிக்கியது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேரி, உடனடியாக உயரகதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புடைய அந்த தங்க நாணயத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி மேரி கூறினார். இதையடுத்து மேலதிகாரி கவுதம், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியரான கணேஷ்ராமன் என்பவரின் மனைவி, ஆயுத பூஜைக்காக வீட்டை சுத்தம் செய்தபோது தங்க நாணயத்தையும் சேர்த்து குப்பையில் போட்டது தெரியவந்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் தகவல் தெரிவித்த கணேஷ், சாத்தாங்காடு காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து கணேஷ் ராமன் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு தூய்மை பணியாளர் மேரியின் கைகளால், அவருக்கு சொந்தமான 100 கிராம் தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டது. குண்டுமணி அளவில் தங்கம் கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் மக்களுக்கு மத்தியில் மேரியின் நேர்மையை கண்டு காவல்துறையும், பொதுமக்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேரியின் நேர்மையை பாராட்டி சாத்தாங்காடு காவல் ஆய்வாளர், அவருக்கு பாராட்டு தெரிவித்து கவுரவப்படுத்தினார்.

click me!