Weather update:சென்னை மக்களே! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகுது: தமிழ்நாடு வெதர்மேன் பிரத்யேகப் பேட்டி

Published : Mar 04, 2022, 09:11 AM ISTUpdated : Mar 04, 2022, 09:21 AM IST
Weather update:சென்னை மக்களே! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகுது: தமிழ்நாடு வெதர்மேன் பிரத்யேகப் பேட்டி

சுருக்கம்

Weather update:தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வுமண்டலமாகி கரையைக் கடக்கும் போது சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வுமண்டலமாகி கரையைக் கடக்கும் போது சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு 700 கிமீ தெற்கே தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இத்தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, மெதுவாக வடக்கே-வடகிழக்கே நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். 

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை, சென்னைக்கு எத்தனை நாட்களுக்கு மழை, மழைஎத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான், ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேகப்பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

குறைந்த காற்றழுத்தபகுதியால் சென்னையில் எப்போது மழை தொடங்கும்?

சென்னையைப் பொறுத்தவரை 5-ம் தேதி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன், குளிர்ச்சியான சூழலே இருக்கும். ஆனால், 5-ம் தேதி இரவிலிருந்து 7ம் தேதிவரை மழையை எதிர்பார்க்கலாம். 

சென்னையில் கனமழை இருக்குமா?

ஆமாம், சென்னையில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்பது முதல்கட்டக் கணிப்பு. காற்றழுத்த தாழ்வுமண்டலம்தீவிரைடந்து மாமல்லபுரம் அல்லது புதுச்சேரி இரு இடங்களில் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அதை வைத்து மழையின் தீவிரம் எப்படி என்பதைக் கூறலாம். 5-ம் தேதி சென்னையில் லேசான சாரல், குளிர்ந்தவானிலை, மேமமூட்டத்துடன் இருக்கும். ஆனால், 6 மற்றும் 7ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. 

பொதுவாக காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரையைக் கடக்கும் பகுதிக்கு வடக்கு, வடமேற்கு திசையில் மேல்பகுதியில்தான் மேகங்கள் அதிகமாகக் காணப்படும். அங்குதான் அதிக மழை இருக்கும். ஒருவேளை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தால் சென்னைக்கு மிககனமழை இருக்கும், கடலூர் பகுதிக்கு மழை குறைந்துவிடும்.

ஆனால், காற்றழுத்த தாழ்வுமண்டலம் நகர்ந்து சென்னைக்கு மேல்பகுதிக்குச் சென்றால், அதாவது ஆந்திராக் கடற்பகுதிக்கு நோக்கி நகர்ந்தால் சென்னைக்கு மழை குறையும்.

கடந்த காலங்களைப் போல் சென்னையில் மேகவெடிப்பு மழை போன்று இருக்குமா?

காற்றழுத்த தாழ்வுமண்டலம் சார்ந்த மழை அடர்ந்த மேகங்கள் இருக்கும் இடத்தில் 200 மி.மீ மழைகூட பெய்யக்கூடும். எந்த இடத்தில் கரையைக் கடக்கிறதோ அந்த இடத்தில்தான் பெய்யும்.  ஆனால் எந்த இடம் என்பதுதான் தற்போது இருக்கும் கேள்வி. 
சென்னைக்கு அருகே கரையைக் கடந்தால், சென்னையைவிட திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும்.புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தால் சென்னைக்கு மிக கனமழை இருக்கும், ஆனால் எந்த இடத்தில் பெய்யும் என்பதை 24மணிநேரத்துக்கு முன்பாகக் கணிக்கலாம்.

சென்னையில் எந்தெந்த நேரத்தில் மழை பெய்யும்?

வெப்பச்சலமழைக்கு நேரத்தை சரியாகக் குறிப்பிடலாம். இது காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கிடைக்கும் மழை என்பதால் குறிப்பிட்ட நேரத்தில்தான் மழை  பெய்யும் எனக்கூற முடியாது. நாள்முழுவதும்கூட மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கிடைக்கும் மழை என்பது நாள்முழுவதும்கூட விட்டுவிட்டு மழை பெய்யலாம்

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!