பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.. ப்ளீஸ் சரவெடியை மட்டும் வெடிக்காதீங்க.. TPCB வேண்டுகோள்..!

By vinoth kumarFirst Published Nov 7, 2020, 4:36 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும். குறைந்த ஒலி, குறைந்த மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும். தீபாவளியன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

 பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயலலாம்.

தவிர்க்க வேண்டியவை

1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்கலாம்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

click me!