குழந்தையை பார்த்து விட்டு திரும்பிய போது பயங்கரம்.. கார் கவிழ்ந்து விபத்து.. 3 பெண்கள் உடல் நசுங்கி பலி.!

By vinoth kumarFirst Published Sep 26, 2022, 12:34 PM IST
Highlights

குழந்தையை பார்த்து விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குழந்தையை பார்த்து விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையையும், மனைவியையும் பார்ப்பதற்காகக் ஏஜாஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் சென்றுள்ளார்.  அப்போது அவருடன் ஏஜாஸின் தாய் சமீம் (50), தங்கை அம்ரின் (22), இவர்களது உறவினர்கள் நசீம் (45), சுபேதா (21), ஆகியோரும் சேலம் சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சேலத்திலிருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் நசீம் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!