பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Sep 24, 2022, 6:46 AM IST
Highlights

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பஸ், ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

ரயிலில் பட்டாக் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பஸ், ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளில் ரூட் தல பிரச்னை தொடங்கி தற்போது ரயில்களிலும் பயணிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கல்லூரி மாணவர்கள், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் கல்லூரி மாணவன் ஒருவர், பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் செல்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்து சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக் கோட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், அரிவாள், கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய  ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. 

click me!