இதை மட்டும் பின்பற்றினாலே போதும்.. எந்த அலையையும் சமாளிக்கலாம்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.!

By vinoth kumarFirst Published Jul 9, 2021, 12:58 PM IST
Highlights

தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறும்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணிகள் நின்று விடுகிறது. தடுப்பூசி சீராக வருவதற்கும் மக்கள்தொகை அடிப்படையில் அவை வழங்குவது குறித்தும் பேசப்படும். 

தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

டெல்லி செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு குறித்து முதல்வர், ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இருந்தார். தற்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்தச் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், டாக்டர் வி.கே.பால் ஆகியோரை சந்திக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டுள்ளதால் இந்தப் பயணம் என தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பில், முதல்வர் சொன்னப்படி, தடுப்பூசி கேட்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது, 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இந்தாண்டிலேயே தொடங்குவது, கருப்பு பூஞ்சை மருந்தைக் கூடுதலாக பெறுவது உள்ளிட்டவை பற்றி பேசி வலியுறுத்தப்படும். புதிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி தந்ததும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சருடன் மீண்டும் சென்று சந்திக்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடக்கிறது. இரண்டு கோடி வரை தடுப்பூசி போடலாம். தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறும்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணிகள் நின்று விடுகிறது. தடுப்பூசி சீராக வருவதற்கும் மக்கள்தொகை அடிப்படையில் அவை வழங்குவது குறித்தும் பேசப்படும். கட்டுப்பாட்டுகளுடன் கூடிய தளர்வுகள் என்பதை மக்கள் உணர வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அடிக்கடி கை கழுவுவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும் என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

click me!