பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் மீது பறவை மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த வீரர் உயிர் தப்பினார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் விமானப்படை பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு தினமும், வீரர்கள் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்வது வழக்கம். இதையொட்டி, இன்று காலை வீரர் ஒருவர், பயிற்சியில் ஈடுபடுவதற்காக போர் விமானத்தை இயக்கினார்.
சிறிது தூரம் வானில் சென்று விமானம் வட்டமடித்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு பறவை, திடீரென விமானத்தின் முன் பகுதியில் வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய போர் விமானம் தறிக்கெட்டு பறந்தது. உடனே சமாளித்து கொண்ட வீரர், சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மெதுவாக தரையிறக்கினார்.
ஆனால், விமானத்தின் ஒரு இன்ஜின் பழுதாகிவிட்டது. அதனை அறிந்த அவர், லாவகமாக விமானத்தை கீழே இறக்கினார். இதனால், பயிற்சி தளத்தில் பரபரப்பு நிலவியது.