
டிசம்பர் 31 அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பண்டிகை காலங்களில் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை மக்கள் தவிரக்க வேண்டும்.
* டிசம்பர் 31 அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும்.
* கடற்கரை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட கூடாது.
* ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
* அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் விலா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது.
* அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலமும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.
* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உட்பட அனைத்து வழிப்பாட்டுதலங்களிலும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பயன்படுத்த வேண்டும். முகக்வசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* டிசம்பர் 31ம் தேதி அன்று முக்கிய சாலைகளில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஒட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.