சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் சென்னையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டு வருகின்றன.
சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் சென்னையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 2வது அலை கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்திலும் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.
குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்து வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி தொடர் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுவர்களுக்குப் பெரிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நோயாளிக்குச் சிறிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதேநேரம், அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் 11,775 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.