தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும்.
கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதால் மார்ச் மாதத்திலோ அல்லது மார்ச் மாத இறுதியிலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு முடிவு குறித்து எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.