
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதியதில் 2ம் வகுப்பு மாணவன் தீட்சித் உயிரிழந்த பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக்கரத்தில் சிக்கிய மாணவன் பலி
சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் தீட்சித் (7). இவர் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவன் தீக்சித், பள்ளி வாகனத்தில் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது மைதானத்திற்குள் வாகனத்தில் இருந்து இறங்கிய மாணவன் தீக்சித், புத்தகப் பையை வாகனத்தில் மறந்து சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் தீக்சித் மறந்து சென்ற புத்தகப் பையை எடுக்க மீண்டும் பள்ளி வாகனத்தில் ஏறியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறியாத ஓட்டுனர் வாகனத்தை திடீரென எடுத்தபோது மாணவன் தீக்சித் தவறி கீழே விழுந்ததில் வாகனத்தின் சக்கரம் பள்ளி மாணவன் தீக்சித் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தீக்சித் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ஓட்டுநர் கைது
இது குறித்து உடனே வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி வாகன ஓட்டுனரான முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம்(64) என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.