செம குட் நியூஸ்.. சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்ட 6 மருத்துவர்கள்.. அசத்தும் அரசு மருத்துவமனைகள்

By karthikeyan VFirst Published Apr 25, 2020, 9:20 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 மருத்துவ முதுகலை மாணவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 
 

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையும் கொரோனா தடுப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் விளைவாக தேசியளவில் அதிகமானோரை கொரோனாவிலிருந்து குணப்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் இதுவரை 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 960 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 835 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 

கொரோனா தொற்றுள்ளவர்களை குணப்படுத்த இரவு பகலாக போராடும் மருத்துவர்கள், மருத்துவ முதுகலை மாணவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அரசு எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ முதுகலை மாணவர்கள், செவிலியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  

அந்தவகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 மருத்துவ முதுகலை மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்றுவந்தனர். நோயாளிகளை காக்க போராடும் மருத்துவர்கள் குணம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். அந்தவகையில், அந்த 6 மருத்துவ முதுகலை மாணவர்களும் பூரண குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் இன்று குணமடைந்தனர். அவர்களில் 6 பேர் மருத்துவ முதுகலை மாணவர்கள்.

ஏற்கனவே கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவ முதுகலை மாணவர்கள் சிலர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்தனர். இந்நிலையில், தற்போது சென்னையிலும் 6 மருத்துவர்கள் குணமடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை ஒரு கூட்டம் எப்போதுமே ஏளனமாகத்தான் பார்க்கும். அரசு மருத்துவமனைகள் என்றாலே ஏழைகள் செல்லக்கூடிய மருத்துவமனைகளாக இருந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் கோவை இ.எஸ்.ஐ, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறப்பாக சிகிச்சையளித்து கொரோனா தொற்றுள்ளவர்களை குணப்படுத்திவருகின்றன. அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு பாராட்டுக்குரியது.
 

click me!