
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2865 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67468ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இன்று 32,079 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2865 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,468ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2424 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,263ஆக அதிகரித்துள்ளது. 28836 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று 33 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 866ஆக அதிகரித்துள்ளது.