புரட்டி எடுக்கும் நிவர் புயல்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்களும், 26 விமானங்களும் நாளை ரத்து...

By vinoth kumarFirst Published Nov 25, 2020, 2:22 PM IST
Highlights

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் அந்த புயல் சுமார் 11 கி.மீ வேகத்தில் நகருவதாகவும், 155 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

சென்னை போன்ற பல இடங்களில் அதீத கனமழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து இயக்கப்படும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!