தமிழ்நாட்டில் இன்று கொரோனா பரிசோதனையும் உச்சம்; பாதிப்பும் உச்சம்..! ஒரே நாளில் 2396 பேருக்கு தொற்று உறுதி

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 6:21 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2396 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56845ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக  33231 பரிசோதனைகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் முதல் முறையாக இன்று 30 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், பாதிப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 2396 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56845ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாலில் 1254பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39641ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1045 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31316ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. 

இன்று 38 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 704ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.23%ஆக உள்ளது.
 

click me!