தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பும் உச்சம்.. உயிரிழப்பும் உச்சம்..! தொடரும் சோகம்

By karthikeyan VFirst Published Jun 6, 2020, 6:28 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,458பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. அதிகமான தொற்று பாதிப்பை கண்டறியும் விதமாக, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
 
மே 3ம் தேதி வரை, தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுவந்த நிலையில்,  4ம் தேதி முதல் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம்(4ம் தேதி) 16 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று(5ம் தேதி) 15,692 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று 16,022 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று 16,022 பரிசோதனை செய்யப்பட்டதில், 1,458 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 30,152ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 1,146 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,972ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 861 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 633 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

click me!