வம்பு சண்டைக்கு போகமாட்டோம்.. வந்த சண்டையை விடமாட்டோம்!! இதோ இப்போவே ஆரம்பிச்சுட்டாருல கோலி

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 12:35 PM IST
Highlights

எதிரணி வீரர்களை வம்பிழுத்து சீண்டி உளவியல் ரீதியாக வீழ்த்தி பின்னர் விக்கெட்டை வீழ்த்துவதும் போட்டியில் தோற்கடிப்பதும் ஆஸ்திரேலிய வீரர்கள் கையாளும் வியூகங்களில் ஒன்று. 

பொதுவாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் என்றாலே சண்டைகளுக்கோ வாக்குவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ பஞ்சமே இருக்காது. 

எதிரணி வீரர்களை வம்பிழுத்து சீண்டி உளவியல் ரீதியாக வீழ்த்தி பின்னர் விக்கெட்டை வீழ்த்துவதும் போட்டியில் தோற்கடிப்பதும் ஆஸ்திரேலிய வீரர்கள் கையாளும் வியூகங்களில் ஒன்று. இதை காலம் காலமாக வெற்றிகரமாக செய்துவருகின்றனர். வெற்றி பெறுவதற்காக எந்தவிதமான செயலிலும் ஈடுபடுவார்கள் என்பது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அம்பலமானது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் இருவரும் தடை பெற்றனர். இந்த விவகாரம் அந்த அணியின் மீதான நம்பகத்தன்மையையே சிதைத்தது. அதனால்தான் இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு அணியை மீண்டும் வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது அந்த அணி நிர்வாகம். எனவே முன்புபோல் ஆஸ்திரேலிய அணி அட்டகாசங்கள் செய்வதில்லை, ஓவரா ஆடுவதுமில்லை. 

இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. ஹர்பஜன் சிங் - சைமண்ட்ஸ் தொடங்கி கோலி வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆக்ரோஷமாக ஆட, அதற்கு சற்றும் குறைவில்லாமல் கோலி ஆக்ரோஷப்பட, கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டல் செய்ய, அதற்கு கோலி நடுவிரலை உயர்த்திக்காட்டியது என சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. 

கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டல் செய்தது, விமர்சித்தது என கடந்த சுற்றுப்பயணங்கள் எதுவுமே சுமூகமானதாக இருந்ததில்லை. படுசுவாரஸ்யமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் கடந்த காலங்களை போல அல்லாமல் கோலி இப்போது முதிர்ச்சி அடைந்துள்ளதால், முன்புபோல் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த மாட்டார். அதேநேரத்தில் கேப்டனாக இருப்பதால் பொறுப்புணர்வு அதிகமாகியுள்ளதால் அதுவே அவரது முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

இதை அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இந்த முறை என்ன சுவாரஸ்யங்கள் எல்லாம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார் கேப்டன் கோலி. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பேசிய கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய அணியுடன் எந்தவிதமான மோதலும் இல்லாமல் ஆடவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். எனது திறமையின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. அதனால் நான் சிறப்பாக ஆடுவதற்கு என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள கடந்த காலத்தை போல எந்தவிதமான மோதலும் தேவைப்படாது. தற்போது அணியின் கேப்டனாக அணியின் நலன் மற்றும் வெற்றியை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க நேரமுமில்லை, அவசியமுமில்லை. 

நாங்கள் எப்போதுமே வாங்குவதை திருப்பி கொடுப்பவர்களே தவிர ஆரம்பிப்பவர்கள் அல்ல. அதனால் ஆஸ்திரேலிய வீரர்களுடன் எந்தவிதமான மோதலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். ஆனால் அவர்கள் அதை விரும்பினால் திருப்பி கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் வம்பு இழுத்தால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என்று கேப்டன் விராட் கோலி அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!