2014ல் நான் அதனால்தான் அவுட்டானேன்.. என் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் முதன்முறை!! வியந்து பேசும் விராட் கோலி

By karthikeyan VFirst Published Jan 24, 2019, 12:06 PM IST
Highlights

பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால், போட்டி சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு சார்பான போட்டியாக அமைந்தது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால், போட்டி சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு சார்பான போட்டியாக அமைந்தது. 

இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. நேப்பியர் போட்டியில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் அரிய சம்பவம் நடந்தது. 

பொதுவாக போதிய வெளிச்சம் இல்லாமலோ அல்லது மழை காரணமாகவோத்தான் ஆட்டம் தடைபடும். ஆனால் நேப்பியரில் நடந்த போட்டியில் சூரியன் சுட்டெரித்ததால் பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் போட்டி தடைபட்டது. 

கிரிக்கெட் ஆடுகளங்கள் அனைத்துமே வடக்கு - தெற்கு திசையில்தான் அமைக்கப்படும். ஆனால் நேப்பியர் மெக்லீன் பார்க் ஆடுகளம் மட்டும்  கிழக்கு - மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சூரியன் மறையும் நேரத்தில் நேராக பேட்ஸ்மேன் அல்லது பவுலர் முகத்தில் அடிக்கும். அதனால் ஆடுகளத்தின் கிழக்கு திசையில் பேட்டிங் ஆடும் அல்லது பந்துவீசும் வீரர்களுக்கு சூரிய வெளிச்சம் இடையூறாக இருக்கும். ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரை தவான் எதிர்கொண்டார். அப்போது நேராக தவானின் முகத்தில் சூரிய ஒளி பட்டதால் அவரால் பேட்டிங் ஆடமுடியவில்லை. இதையடுத்து போட்டி நடுவர்கள் சூரியன் மறையும் வரை போட்டியை நிறுத்தினர். அதனால் டக்வொர்த் முறைப்படி ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவரில் 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் இந்த நிகழ்வு குறித்து பேசிய விராட் கோலி, என் கிரிக்கெட் வாழ்க்கையில், அதிகமான வெளிச்சத்தால் போட்டி தடைபட்ட சம்பவத்தை இப்போது பார்த்திருக்கிறேன். 2014ம் ஆண்டு நேப்பியரில் நடந்த போட்டியில் சூரிய ஒளி நேரடியாக என் கண்ணில் பட்டதால்தான் சரியாக ஆடமுடியாமல் நான் அவுட்டானேன். ஆனால் அப்போது, அதிகமான வெளிச்சம் காரணமாக போட்டியை நிறுத்துவதற்கான விதி கிடையாது, இப்போது இருக்கிறது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார். 
 

click me!