உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் புதிய விதிகள் வேலைக்கு ஆகாது என்கிறார் சாய்னா...

First Published Dec 21, 2017, 10:09 AM IST
Highlights
The new rules of the World Patmundan Federation will not work says Saina ...


உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாட்டு விதிகள் வீரர், வீராங்கனைகளை நெருக்கடிக்கு ஆளாக்கும் என்று கூறியுள்ளார் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

பாட்மிண்டன் தரவரிசையின் ஒற்றையர் பிரிவில் முதல் 15 இடத்தில் இருக்கும் வீரர், வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 10 இடத்தில் இருக்கும் இணைகளும், 2018-ஆம் ஆண்டு பாட்மிண்டன் காலண்டரில் குறைந்தது 12 போட்டிகளிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்றும், அத்தகைய எண்ணிக்கையில் பங்கேற்காத வீரர், வீராங்கனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உலக பாட்மிண்டன் சம்மேளனம் புதிதாக கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு குறித்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், "பாட்மிண்டன் சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடு வீரர், வீராங்கனைகளுக்கு நெருக்கடி அளிப்பதாக இருக்கிறது. தரவரிசையில் மேல் நிலையில் இருப்போருக்கு இந்த முறை சரியாக இருக்காது.

போட்டிகளில் என்னால் அடுத்தடுத்து பங்கேற்க இயலாது. எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தேவைப்படும். புதிய கட்டுப்பாட்டின் படி அதிக போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியும். ஆனால், அவற்றில் வெற்றி பெற முடியாது.

பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டிக்குப் பிறகு மூன்று போட்டிகள் உள்ளன. அதையடுத்து உலக சாம்பியன்ஷிப்பிற்கு முன்பாக மூன்று சூப்பர் சீரிஸ் போட்டிகள் இருக்கிறது.

இந்த நிலையில், எந்த அடிப்படையில் இந்த புதிய கட்டுப்பாட்டை பாட்மிண்டன் சம்மேளனம் கொண்டு வந்தது? என்று தெரியவில்லை. இது, வீரர்களுக்கு சவாலானது என்பதுடன், அவர்களை சோர்வடையச் செய்யும்.

என்னைப் பொருத்த வரையில் நான் உடற்தகுதிக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பேன். போட்டிகளோ, பட்டங்களோ எனக்கு முக்கியமல்ல. டென்னிஸ் போட்டியைப் போல பாட்மிண்டனை மாற்ற விரும்பினால், கிராண்ட்ஸ்லாம் போட்டியைப் போல அதிக பிரபலத் தன்மையும், ரொக்கப் பரிசும் கொண்ட 4-5 போட்டிகளை உலக பாட்மிண்டன் சம்மேளனம் நடத்த வேண்டும்.

2018-ல் காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் நிலையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை உடலுக்கும், மனதுக்கும் ஒரு கட்டத்துக்கு மேல் சவால் அளிக்க முடியாது. அந்த சூழ்நிலையில் காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர உரிய அவகாசம் இருக்காது.

அதையும் மீறி பங்கேற்கும் பட்சத்தில் சிறிய அளவிலான காயங்கள், பெரிதாவதற்கு வாய்ப்பு இருப்பதுடன் அதிலிருந்து மீள மேலும் அவகாசம் தேவைப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 

tags
click me!