எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்.. கோலிக்காக வரிந்துகட்டிய சேவாக்!! ஜாகீர் கானும் சப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 4:08 PM IST
Highlights

இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்தை விரும்பி ரசிப்பதாக கூறிய ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையாக விமர்சித்த விராட் கோலியை அதுதொடர்பான சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் வகையில் சேவாக்கும் ஜாகீர் கானும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்தை விரும்பி ரசிப்பதாக கூறிய ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையாக விமர்சித்த விராட் கோலியை அதுதொடர்பான சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் வகையில் சேவாக்கும் ஜாகீர் கானும் கருத்து தெரிவித்துள்ளனர். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை கோலி முறியடித்துவருகிறார். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த கோலி, ஒருநாள் போட்டிகளில் விரைவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. 

அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் தற்போதும் கோலி சிக்கியுள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராத் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கோலி, என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்? நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதில் அளித்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மற்ற நாட்டு வீரர்களை இந்திய ரசிகர்கள் ரசிப்பது என்பது புதிதல்ல. பிரயன் லாரா, முரளிதரன், சங்ககரா, ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல சச்சின், தோனி ஆகிய இந்திய வீரர்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் என்பது நாடுகளை கடந்து ரசிப்பது. எனவே எந்த நாட்டினரும் எந்த நாட்டு வீரரையும் ரசிப்பது இயல்பு. அதை பொதுவெளியில் சொன்னதற்கு கோலி இப்படி ரியாக்ட் செய்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோலியின் கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், ரசிகர்கள் மற்றும் வீரர்கள் என அனைவருக்குமே அவரவர் கருத்தை தெரிவிக்கும் உரிமையும் தங்களது ஆஸ்தான வீரர்களை தேர்வு செய்யும் உரிமையும் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது இயல்புதான். இதை ஊடகங்கள்தான் சர்ச்சையாக மாற்றுகின்றன என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், ஜனநாயக நாடான இந்தியாவில் ரசிகர்கள், விராட் கோலி என அனைவருக்குமே பேச்சுரிமை இருக்கிறது. அந்த வகையில் அவரவர் தெரிவித்திருப்பது அவரவர் கருத்து என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 
 

click me!